அல்லாஹு தஆலா"(ருஹ்)ஆத்மாவின் சம்பந்தத்தை (கல்பு) இதயத்தோடு இணைத்துள்ளான், இதயம் சக்தியுடையதாக இருந்தால் (ருஹ்) ஆத்மாவும் சக்தியுடையதாகி விடுகிறது. இதயம் (கல்பு) பலஹீனமாக இருந்தால் (ருஹ்) ஆத்மாவும் பலஹீனமாகி விடுகிறது, இதயத்தின் நல்ல தன்மைகளும், கெட்ட தன்மைகளும் ஆத்மாவிலும் (ருஹிலும்) ஏற்படுகின்றன, இதயம் தூய்மையாக இருந்தால் (ருஹும்) ஆத்மாவும் பரிசுத்தமாக இருக்கும். இதயம் கெட்டுவிட்டால் ருஹும் கெட்டுவிடும்.
அல்லாஹு தஆலா முதலில் ஆத்மாவைப் படைத்தான். அதை ஆத்ம உலகத்தில் வைத்தான், ஆத்மா எவ்வளவு நுட்பமானது என்பதை யாரும் மதிப்பிட முடியாது, இது மிக நுட்பமானதாகும். எனினும், இத்தகைய எல்லையில்லா நுட்பமான பொருளுக்கு மண்ணாலான உடலில் தங்குமிடத்தை அல்லாஹ் கொடுத்துள்ளான். அதை அதில் அடைத்து வைத்துள்ளான், என்பதுதான் அல்லாஹ்வின் ஆச்சரியம் மிகுந்த மிக உயர்ந்த நுட்பமாகும் அதற்கு (இன்சான்) மனிதன் என்று பெயரிட்டுள்ளான். மனிதன் தனது தனது நுட்பமான (ருஹ்) ஆத்மா (கல்பு) இதயம், மற்றும் அதன் நாட்ட சக்தி ஆகியவற்றின் முலம் அல்லாஹ்வை அறியவும், அவனை அடையவும், இவ்வாறு செய்தான். இல்லை என்றால் மண்ணில் இவ்வளவு சக்தி இல்லை. அதிலுள்ள தடிப்பத்தின் காரணத்தால் அல்லாஹ்வைப் பார்க்கவோ,அடையவோ அதனால் முடியாது. மனிதன் பூமியில்தான் இருக்கின்றான், மண்ணாலான உடலையே பெற்றிருக்கிறான். ஆனால் அல்லாஹு தஆலா உடைய(தாத்) உள்ளமையோ மறைவிலும் மறைவாய், அப்பாலுக்கும் அப்பால், நினைவுக்கும் சிந்தனைக்கும் அப்பாற்பட்டுத்தான் இருக்கிறான். ஏனினும் அல்லாஹு தாலா மண்ணால் உருவான மனிதனுக்கும் (ருஹ்)ஆத்மா (கல்பு)இதயம், அதன் சக்தி முதலியவற்றை கொடுத்திருப்பதால் அதன் மூலம் அவன் அல்லாஹ்வை அடைகின்றான். கலிஃபத்துல்லாஹ்- அல்லாஹ்வின் பிரதிநிதியாகவும் ஆகிவிடுகிறான். மனிதர்களை அல்லாஹு தஆலா மண்ணால் படைத்து இயலாமை, பணிவு, வழிப்படுதல், எனும் தன்மைகளை இயற்கையாகவே அமைத்தான், அத்துடன் அதில் நெருப்பு, தண்ணீர், காற்று முதலியவைகளையும் வைத்தான். அவற்றின் குணம் பெருமை, மாறுசெய்தால் முதலியனவாகும், மனிதனில் இரண்டு மாறுபட்ட கூறுகள் இருக்கிறன. ஆதலால் மனிதன் சோதனையில் போடப்பட்டுள்ளான். மண்தன்மை இருப்பதால் முழமையான முறையில் அவன் வழிபடவும் செய்வான், நெருப்பு, தண்ணீர் மற்றும் காற்றின் தன்மைகள் இருப்பதால் அவன் பெருமை கொண்டு மாறுபடவும் செய்வான். ஆதலால் மனிதன் சோதனைக்குரியவனாய் இருக்கின்றான். மனிதன் கல்பு, ருஹு போன்ற நுட்பமான சக்தி வாய்ந்த வஸ்துக்களின் மூலம் நாட்டத்தின் சக்தியை உபயோகித்து முயற்சி செய்தால் அவன் அல்லாஹ்வின் நெருக்கத்தை அடைந்துவிடுகின்றான், அல்லாஹு தஆலாவின் பக்கத்தில் நெருங்கி உடனிருத்தல் எனும் பாக்கியத்தைப் பெற்றுவிடுகிறான், நெருக்கத்தின் உச்சநிலையை அடைந்து விடுகின்றான். இதுதான் மனிதன் பிறந்ததன் பயனாகும்.
அல்லாஹு தஆலா மனிதனின் உபயோகத்திற்கு இதயத்தையும்,(ருஹ்) ஆத்மாவையும் நுட்பமான சக்தி வாய்ந்த வஸ்துக்களாகக் கொடுத்துள்ளான். இவை இரண்டும் எல்லாப் படப்புக்களின் மீதும் உயர்வான அந்தஸ்த்தைப் பெற்றுவிடுகின்றன. எனினும் அந்த சக்தியை மனிதன் அல்லாஹ்வின் திக்ரில் உபயோகித்தால்தான் இந்த உயர்வை அடைவான், அதனை துன்யாவிற்காக மட்டும் உபயோகித்தால் அவன் மிருகங்களை விடக் கெட்டவானக ஆகிவிடுவான்; அல்லாஹ் காப்பாற்றுவானாக.ஆமீன்
நன்றி--நூல்-மதனீய்யின் மாண்புகள்
தொகுப்பு--ஹலில் ரஹ்மான் ஹக்கீமி